பேரா. இ.கி. இராமசாமி
பேரா. இ.கி.இராமசாமி அவர்கள், கோவை வெள்ளலூரில் பிறந்தவர். 1969-இல் தொடங்கி 2002 வரை, 33 வருடங்கள் கல்லூரிப் பேராசிரியராக, துறைத்தலைவராக, மதுரை யாதவர் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மேற்பார்வையில் 41 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 9 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். பகுத்தறிவுச் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகளைக் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி மாணவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர உதவி வருகிறவர். இவர் தம் துணைவியார் மு. கசுத்தூரிபாய் அவர்களும் கல்லூரிப் பேராசிரியர். மதுரை யாதவர் கல்லூரியில் பயிரியல் துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.
’தமிழில் பாயிரங்கள்’, ’திராவிட இயக்கச் சிந்தனைகள்’, ’தமிழின் சிரிப்பு’, ’திருக்குறள் நெறியும் பகவத் கீதையும்’, ’காந்தியடிகளும் பாரதிதாசனும்’, ’காந்தியடிகளும் கோராவும்’, ’சமூகப் புரட்சியாளர்கள்’ போன்ற நூல்களின் ஆசிரியர். ’பாரதிதாசன் பன்மணித்திரள்’, ’முப்பாலின் ஒப்புரவு’ என்னும் நூல்களின் பதிப்பாசிரியர். ’குறள் கூறும் ஊழும் கூழும்’, ’திருக்குறளில் தவமும் துறவும்’, ’திருக்குறளில் காமம்’ என்னும் நூல்களின் தொகுப்பாசிரியர்.
2002-இல் பணி ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து பல்வேறு இயக்கப் பணிகளை, தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்துவரும் இவர், அரிய கருத்துகளைச் சுவைபட மெய்ப்பாடுகளுடன் எளிய மொழிநடையில் எடுத்துரைக்கும் நாவன்மை உடையவர். மதுரை, திருச்சி வானொலிகளில் பல்வேறு உரையரங்குகளில் பங்கேற்றுப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
சங்க இலக்கியம், காப்பியம், மரபிலக்கணம், இக்கால இலக்கியம், ஆகிய இலக்கிய வகைமைகளில் ஆய்வும் தோய்வும் உடையவர். தந்தை பெரியாரின் கொள்கை வழி நின்றும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தமிழ் உணர்வோடு ஒன்றியும் விளங்கும் பெருமைக்குரியவர். சாதி சமய மறுப்புத் திருமணங்களும், விதவைத் திருமணங்களும் நிகழ்த்தி வைத்த சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர். தமிழியல் உணர்வுடைய மாணவப் பரம்பரையை உண்டாக்கிய பெருந்தகையர்.