எழுத்தாளர் ஞான. வள்ளுவன்
ஞான. வள்ளுவன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புவியமைப்பியலில் இளம் அறிவியல், சமூகவியலில் முதுகலைப் பட்டம், மற்றும் மருத்துவமனை மேலாண்மையில் முதுநிலைப் பட்டயம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவத்துறையில் இளநிலை உதவியாளராக 1977ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர், பதவி உயர்வுகளுக்குப் பின் நிருவாக அலுவலராக கடந்த 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தன் தந்தை வழியொற்றி, தந்தை பெரியார் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். 1999ஆம் ஆண்டு முதல், நண்பர்களோடு இணைந்து ‘தந்தை பெரியார் கல்வி அறக்கட்டளை’ என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.
எழுதுவதில் விருப்பம் கொண்டு இதுநாள் வரை ’பெரியார்-95’, ’திராவிட இயக்கமும் எங்கள் ஊரும்’, ’தமிழர் வாழ்வில் சாதியும் மதமும் - அன்றும் இன்றும்’, ’இசை வேளாளர்’, ’வரலாற்றில் வென்ற அவர் தாம் பெரியார்’, ‘செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்’, ’தளிச்சேரிப் பெண்டுகள்’, ‘ஸநாதனம்’, ’ராஜநாயகம்’, ’ஆச்சாரம்’, ’பாதை தவறாத பாதங்கள்’, ‘சில பக்கங்கள் சில தாக்கங்கள்’ என இதுவரை 12 நுால்களை எழுதியுள்ளார். இவரது நுால்கள் நுாலக ஆணைக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல நுாலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.