English

View in English

முந்தைய இதழ்கள்

தொகுதி 3, வெளியீடு 4 | அக்டோபர் 2023 - டிசம்பர் 2023

Foreword from the editors


ஆராய்ச்சியும் தேடுதல் மனப்பான்மையும் கொண்ட திராவிடப் பொழில் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.

திராவிடப் பொழில் ஆய்விதழ், தனது 4-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், 12 இதழ்களினூடே ஆராய்ச்சிக் கட்டுரைகளை - இலக்கியம், தொல்லியல் & வரலாறு தொடங்கி, சமூகநீதி, பெண்ணியம் & பகுத்தறிவு வரை - பல்வேறு பொருண்மைகளில் தொடர்ச்சியாக வெளியிட்டு இருக்கிறது. எம்முடன் பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா இணைந்து கொண்டு, அறிஞர்கள் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரைகளைப் பொதுமக்களிடத்தேயும் கொண்டு சேர்த்து, உலக அளவிலான பரவலைச் செய்கிறது. இணையவழியாக ஆய்வு அறிஞர்களை அழைத்து, அவர்களை ஆய்வுரை நிகழ்த்தச் செய்து, கட்டுரைகளின் மீதான கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குக் கட்டுரை ஆசிரியர்கள் மூலமாகவே பதில் அளித்துத், தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தி வருகிறது.

திராவிட அறிவுப் புலமையை, உலகெங்கும் கொண்டு சேர்க்கும் முகத்தான், புகழ்மிக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் தமிழ்நாடு, இந்தியா & உலக அளவிலான நூலகங்கள் பலவற்றில் திராவிடப் பொழில் ஆய்விதழைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இளைய பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ மாணவிகள் எல்லோருக்கும் திராவிடப் பொழில் இதழில் பங்களிக்கும் வாய்ப்பினை நல்க வேண்டும் என்பது எமது அவா.

இந்த இதழில் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

  • பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி (2021-22): சங்க கால வாழ்வியல் குறித்த தரவுகள்
  • தமிழ் வளர்ச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பங்கு.
  • தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டமும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களும்
  • கற்றல் கற்பித்தலில் கலைகளின் பங்கு (ஒயிலாட்டத்தை முன்வைத்து)
  • சுயமரியாதைத் திருமணங்கள் - சமூகமும் சட்டமும்

இந்தக் கட்டுரைகளை வாசியுங்கள். உங்கள் புலத்தில் உள்ள கல்வியாளர்களிடமும் ஆராய்ச்சியாளர்களிடம் பகிருங்கள். விவாதியுங்கள். விவாதிக்கச் சொல்லுங்கள்.

‘மெய்ப்பொருள் காணும் அறிவை’ வளர்த்தெடுக்கும் இக் கல்விப் பயணத்தில், நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம். ’அனைவருக்கும் அனைத்தும்‘ என்பதே திராவிட அடிப்படை. அவ்வண்ணமே, கல்விச் செல்வத்தையும் ஆய்வுச் செல்வத்தையும் அனைவருக்கும் அறியத் தருவோம்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்

தொகுதி 3, வெளியீடு 3 | ஜூலை 2023 - செப்டம்பர் 2023

Foreword from the editors


அறிவுப்புல அன்பர்களாகிய திராவிடப் பொழில் வாசகர்களுக்கு, வணக்கம்!

பெரியாரின் பெருநண்பர், பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளிலே (July 15) இவ்விதழ் வெளிவருகின்றது. இதுகாறும் ’திராவிடப் பொழில்’ காலாண்டு ஆய்விதழ், 10 வெளியீடுகளை வெற்றிகரமாகக் கடந்து, 11ஆம் இதழில் அடியெடுத்து வைக்கிறது.

’பதிகம்’ என்று இலக்கிய வெளியில் ஒரு செழுஞ்சொல் சொல்வர்கள். 10 பாடல்கள் கொண்டது ஒரு பதிகம். செய்யுள் தொகுப்பில் ஒரு பதிகம் நிறைந்து, அடுத்த பதிகம் செல்ல வேண்டும். அது போலவே நாமும், நமது முதற் பதிகம் கடந்து, அடுத்த பதிகத்திலும் சமூகநீதி வித்துகளைத் தூவி, மாந்தவியல் வேளாண்மையைத் தொடர்ந்து முன்னெடுக்க உறுதியேற்போம்!

கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் திராவிடப் பொழில் கடந்து வந்த பாதை குறித்து, ஆசிரியர் குழுவில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினோம். நமது வேந்தர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நிகழ்வுற்ற இக் கூட்டம், இது வரையிலான நம் சாதனைகளையும் சோதனைகளையும் தரவுகளோடு அலசி ஆய்ந்தது. சாதனைகளின் மேற்சென்று, அடுத்த கட்ட இலக்குகளை மானமிகு வேந்தர் நமக்கு வகுத்தளித்துள்ளார். அந்த ஈராண்டுத் தரவுகளை, உங்கள் பார்வைக்கும் இவ்விதழில் வைக்கிறோம்.

இவ்வாண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு & கலைஞர் நூற்றாண்டு எனும் இரு பெருஞ்சிறப்புகளைத் தாங்கி நடைபோடுகிறது.

வழிபாட்டுச் சமத்துவத்தை நிலைநாட்ட, இந்தியத் துணைக்கண்டத்தில் எழுந்த முதற் போராட்டம் வைக்கம் போராட்டம். வீதி நுழைவாகத் தொடங்கி, ஆலய நுழைவாக வளர்ந்து, யாவரும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற நிலையடைய, பின்னாளில் எழுந்த பற்பல போராட்டங்களின் முதல் தாய், வைக்கம் போராட்டமே. அதே போல், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த கருவறைச் சாதி ஆதிக்கத்தை முறியடித்து, முறையான பயிற்சியோடு யாவரும் கருவறைக்குள் நுழைந்து பணி செய்யலாம் என்ற நிலையடைய அரசாணை வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இப்படியாகச் சமத்துவத்தின் இரு நூற்றாண்டுகளும் ஒருசேர வருவது, சமூகநீதி வரலாற்றில் சிறப்பானதொரு காலக்கட்டம்.

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • இந்தியாவில் சாதிகள்: இயங்குமுறை, தோற்றமும் பெருக்கமும்
  • தமிழ்ச் சூழல் : சமூகநீதி - வ.உ.சி.
  • செக்கார் வணிகச் சமூகம் - ஒரு வரலாற்றுப் பார்வை
  • அவ்வை என்னும் அரிய தமிழ் அறிஞர்
  • பிற்காலச் சோழர்களின் செப்பேடுகளும், பார்ப்பனர்களுக்கான தானங்களும்

திராவிட ஆய்வுப் புலமையை உலகறியச் செய்யும் இந்த இடையறாக் கல்விப் பயணத்தில், நயன்மிகு ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொள்வோம். ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து மகிழ்க, கல்விப்புல நண்பர்களிடமும் பகிர்ந்து மகிழ்க. கல்விச் செல்வத்தின் பயனே ஈதல் அல்லவா! திராவிடக் கல்விச் செல்வத்தையும் ஆய்வுச் செல்வத்தையும் அனைவருக்கும் தருவோம்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்

தொகுதி 3, வெளியீடு 2 | ஏப்ரல் 2023 - ஜூன் 2023

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


அன்பும் அறிவும் கெழுமிய திராவிடப் பொழில் வாசகர்களுக்கு, வணக்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாளைச் ’சமத்துவ நாள்’ என அறிவித்து, அந்நாளில் யாவரும் சமத்துவ உறுதிமொழி ஏற்க ஆவன செய்துள்ளார், மாண்புமிகு மானமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள். திராவிடக் கல்விச் சிந்தனையின் அடிநாதமே சமத்துவமும், அதன் பாற்பட்ட சமூகநீதியும் தானே! சமத்துவ உறுதியேற்போம்!

இவ்வாண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு எனும் பெருஞ்சிறப்பு பெற்று மிளிர்கிறது.

ஆதிக்க மனப்பான்மையை வீழ்த்திச் சமத்துவத்தை நிலைநாட்டும் முகத்தான், இந்தியத் துணைக்கண்டத்தில் எழுந்த முதற் போராட்டம், வைக்கம் போராட்டம். வீதி நுழைவாகத் தொடங்கி, ஆலய நுழைவாக வளர்ந்து, யாவரும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற நிலையை அடைய, பின்னாளில் எழுந்த பற்பல போராட்டங்களின் தாய், வைக்கம் போராட்டமே!

அதற்குள் ஒரு நூற்றாண்டு கடந்து விட்டதா? ஆயினும், சமத்துவம் இன்னும் முழுமையாகக் கிட்டியபாடில்லை. ஆலய நுழைவைக் கண்டு விட்டாலும், அனைத்துச் சாதி அர்ச்சக உரிமையை இப்போது தான் சிறுகச் சிறுகப் பெற்றுக் கொண்டுள்ளோம். “நான் மேல், நீ கீழ்” எனும் நிலையே இல்லாத கோயில்களையும், கோயில்கள் மட்டுமல்லாது எல்லாச் சமூக நிறுவனங்களையும், சமத்துவக் குடையின் கொண்டு வர உழைப்புறுதி மேற்கொள்வோம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழ் அறத்தை இந்த நூற்றாண்டிலாவது முழுமையாக நிலைநாட்டுவோம்.

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது

  • Ever Vibrant Revolutionary (EVR) Periyar & Ever Remembered Revolutionary Bhagat Singh
  • The Myth of Rama Setu & Truth of the Sethu Canal
  • கற்றலும் கற்பித்தலும் - சங்ககாலம் முதல் சோழர்காலம் வரை
  • வைக்கம் போராட்டம்: சமூகநீதிக்கான வரலாற்றுத் திருப்புமுனை
  • உயர் கல்வியும் திராவிட இயக்கமும்.

திராவிடப் பொழில் ஆய்விதழின் நோக்கம்: திராவிட இயக்கத்தின் ஆய்வுப் புலமையை உலகறியச் செய்வதே! இந்த இடையறாக் கல்விப் பயணத்தில், உலகக் கல்வியாளர்களைத் திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்கு திரட்டி, திராவிடப் பண்பாடு சார்ந்த அறிவுப்புலத் துறைகளில், நயன்மிகு ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்வோம். இக் கட்டுரைகளை வாசித்து மகிழ்க, கல்விப்புலத்தில் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்க. வாசகர்கள் பெருக, வாசகர்கள் வருக!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்

தொகுதி 3, வெளியீடு 1 | ஜனவரி 2023 - மார்ச் 2023

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


அன்பு சால் திராவிடப் பொழில் வாசகர்களே,

  • தமிழ்ப் புத்தாண்டு நல் வணக்கம்! இல்லந்தோறும் இன்பப் பொங்கல் தைத் திருநாள் வாழ்த்துக்கள்!
  • இவ்விதழுடன் நம் ஆய்விதழுக்கு அகவை இரண்டு! திராவிடப் பொழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  • ஆய்விதழுக்கு மட்டுமா பிறந்தநாள்? ஆசிரியருக்கும் தான்! நம் பல்கலைக்கழக வேந்தர், தமிழர் தலைவர், மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், சென்ற திங்களில் அகவை 90 தொட்டு, முன்னிலும் இளந்துடிப்போடு விரைந்தோடிப் பகுத்தறிவுப் பணிகளை மேற்கொள்கிறார். அவருக்கும் மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இப்படி, இவ்விதழே வாழ்த்து பல கமழ்ந்து, இன்பப் பொங்கல் பொங்கி மகிழ்கிறது.

  • பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி (பதிற்றுப் பத்து, சங்கத் தமிழ்)
  • புதுக் கலத்து எழுந்த தீம்பால் பொங்கல் (சீவக சிந்தாமணி)

இலக்கியப் பொங்கலின் இன்பம் போலவே, ஆய்வுப் பொங்கலின் சுவை மிளிரும் நம் திராவிடப் பொழில் இதழ், ஈராண்டு நிறைந்து, மூன்றாம் அகவையில் மிளிர் நடை எடுத்து வைக்கின்றது! இதுகாறும் நாம் கடந்து வந்த பாதையை அளவிட்டு, இனி கடக்கப் போகும் பாதையைத் திட்டமிட்டு, செயல் திட்டம் வகுத்துக் கொள்வோம். இது வரை வெளிவந்துள்ள 49 ஆய்வுக் கட்டுரைகளின் பொருண்மை இதோ:

சென்ற ஆண்டுகளின் வெற்றிகளை விஞ்சிச் செயல்படுவதே, தொடர் முன்னேற்ற (Continuous Improvement) முறைமை! இவ்வாண்டுப் பயணத்துக்காக நாம் வகுத்துக் கொள்ளும் இலக்குகள் இவையே:

  • ஆராய்ச்சி மாணவர்களை ஊக்கப்படுத்தல் (குறிப்பாகப் பெண் மாணவர்கள் & ஒடுக்கப்பட்ட சமூகப் புல மாணவர்கள்)
  • உலக ஆய்வுத் திரட்டிகளில் இணைந்து செயல்படுதல்
  • அறிவியல் ஆதாரங்கள் மூலமாகத் திராவிட ஆய்வு வெளிச்சம் பாய்ச்சுதல்

இந்த இதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • இந்தியச் சமூகநீதி & சாதியொழிப்புப் போரில், சுயமரியாதை இயக்கத்தின் பங்குபற்றல்
  • இலங்கைத் தமிழ்ச் சமூகவெளியில் சமூகநீதியின் வரலாறு
  • வேதங்களின் இருண்ட இரகசியங்கள்
  • ‘கற்பு’, ‘கணவன்-மனைவி உறவின்முறை’ & ‘தாய்மை’ குறித்துச் சுயமரியாதை இயக்க அணுகுமுறை
  • தமிழே திராவிடம்.

இக் கட்டுரைகளை நீங்களும் வாசித்து, கல்விச் சூழலில் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்க. இந்த இடையறாக் கல்விப் பயணத்தில், எம்மோடு இணைந்து பயணம் செய்யும் வாசகர்களாகிய உங்களுக்கு எமது நனி மிகு நன்றி.

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்

தொகுதி 2, வெளியீடு 4 | அக்டோபர் 2022 - டிசம்பர் 2022

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


திராவிடப் பொழில் வாசகர்களுக்குச் சமூகநீதி நல்வணக்கம்!

செப் 24 & 25 திகதிகளில், கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில், ‘பன்னாட்டு மனிதநோக்கு & சமூகநீதி மாநாடு’ சிறப்புற நிகழ்ந்தேறியது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, கீழை நாடுகள், இந்தியா, இலங்கை என்று உலகெங்கிலிருந்தும் பல சமூகவியல் அறிஞர்களும், பேராசிரியர்களும், அரசாங்க அலுவலர்களும் கலந்து கொண்டு ஆய்வுத் தாள்களும் உரைகளும் வழங்கினர். இம்மாநாட்டைப் பெரியார் பன்னாட்டமைப்பு (PI) அமெரிக்காவுடன், கனேடிய வினவு மையம் (CFIC), கனடா மனிதநோக்கு (HC), மற்றும் ரொறன்ரோ மனிதநோக்குச் சங்கம் (HAT) ஆகிய 3 அயலக அமைப்புகளும் ஒருங்கிணைந்து நடத்தின. உலக மேடையிலிருந்து Dravidian Model குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது!

தமிழர்களுக்கு மட்டுமல்லாது, மேலை & கீழை நாட்டு மக்கள் யாவருக்கும், திராவிட மாதிரியின் சமூகநீதியை அறிமுகம் செய்வதும், அயலகங்களில் விளைந்துள்ள மனிதநோக்கினையும் சமூகநீதியினையும் தமிழ்வெளியில் ஒப்பிட்டுச் செம்மை செய்து கொள்வதுமே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

மனிதநோக்கும் சமூகநீதியும் என்பதே மாநாட்டின் மையப்பொருள். அந்தக் கருத்துக் கழனியில்..

  • மனிதநோக்கும் பெண்ணுரிமையும்
  • சிறார்களிடையே மனிதநோக்கு
  • அன்றாடப் பகுத்தறிவுச் சிந்தனைகள்
  • சோதிடப் புரட்டை ஒழித்தல்
  • ஒடுக்கப்பட்டோருக்கான மனிதநோக்கு விடைகள்
  • தமிழ் வரலாறும் சமூகநீதியும்
  • திராவிட மாதிரியின் சமூகநீதி
  • கல்வியில் மனிதநோக்கு
  • உடல்நலத்திலும் வளத்திலும் மனிதநோக்கு
  • குடிபெயர்ந்தோருக்கான சமூகநீதியும் மனிதநோக்கும்

என்று மேற்காணும் பத்து உட்பொருண்மைகளில், இப் பன்னாட்டு மாநாடு நடைபெற உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், மானமிகு ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களும், மாண்புமிகு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி அனந்தசங்கரி அவர்களும், மேலைநாட்டு அறிஞர் பெருமக்களோடு, தங்களின் சீரிய உரைகளையும் ஒருங்கே வழங்கினார்கள். ஆசிரியரின் வாழ்நாள் மனிதநேய & மனிதவுரிமைப் பணிகளைப் பாராட்டிக் கனேடிய மனிதநேய அமைப்பு, “மனிதநேயர் சாதனையாளர்” என்ற விருதளித்துச் சிறப்பித்தது.

உரைகள் மிக்க பேச்சாக மட்டுமன்றிச் செயலிலும் சமூகநீதி செய்யும் முகத்தான், வளம்குன்றிய கனேடிய ஆதிகுடிக் குழந்தைகளுக்கான உணவுப் பொட்டலம் மடித்தலையும் மாநாட்டில் கலந்து கொண்டோர் செய்தார்கள். புத்தகக் கண்காட்சியும் நிகழ்வுற்றது. இம்மாநாட்டில், தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகக் குழுவும் கனடா வருகை தந்து பாங்குறக் கலந்து கொண்டது. ‘சாதி சூழ் உலகு’ என்ற தலைப்பில் இம்மாநாட்டுக்கென்றே வரையப்பட்ட பகடி நாடகமும் Nakkalites குழுவினரால் அரங்கேறியது. இம் மாநாடு, உலகளாவிய திராவிடத்தின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துற்றது அனைவருக்கும் மகிழ்ச்சி.

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • கனேடியப் பன்முகப் பண்பாட்டில் மனிதநேயமென்னும் ஆயுதம்
  • தமிழ்ச் சமூகத்தில் சமூகநீதியின் வரலாறு
  • வரலாற்றுச் சுவடுகளில் நாத்திகத்தின் அறிவுத் திறனோக்கிய வளர்ச்சி
  • கலைஞர் மு. கருணாநிதியின் மேற்கோளாட்சியில் பாரதிதாசன் கவிதைகள்
  • டாக்டர் அம்பேத்கரும் இந்து சட்டத் தொகுப்பு மசோதாவும்

இந்த ஆய்வுக் கட்டுரைகளை, நீங்களும் வாசித்து உங்கள் கல்விப்புல அன்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். நம் திராவிடக் கல்விப் பயணம், கடல்கடந்து, உலகெலாம் சென்று சிறக்கட்டும்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 2, வெளியீடு 3 | ஜூலை 2022 - செப்டம்பர் 2022

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


அன்பறிவார்ந்த திராவிடப் பொழில் வாசகர்களுக்கு, எதிர்வரவிருக்கும் சமூகநீதி நாள் நல்வணக்கம்!

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாளைச் ’சமூகநீதி நாள்’ என மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, நம் மக்கள் அனைவரையும் சமூகநீதி உறுதிமொழியை ஏற்கச் செய்து ஓராண்டு நிறைகிறது. அந்த நிறைவான பொழுதிலே, இன்னொரு சமூகநீதிப் பெருவிழாவும் நிகழவிருக்கின்றது.

எதிர்வரும் செப் 24 & 25 திகதிகளில், கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில், ‘பன்னாட்டு மனிதநோக்கு & சமூகநீதி மாநாடு’ சிறப்புற நிகழவுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை என்று உலகெங்கிலிருந்து பல சமூகவியல் அறிஞர்களும், பேராசிரியர்களும், அரசாங்க அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இம் மாநாட்டைப் பெரியார் பன்னாட்டமைப்பு (PI) அமெரிக்காவுடன், கனேடிய வினவு மையம் (CFIC), கனடா மனிதநோக்கு (HC), மற்றும் ரொறன்ரோ மனிதநோக்குச் சங்கம் (HAT) ஆகிய 3 அயலக அமைப்புகளும் நம்முடன் ஒருங்கிணைந்து நடத்துகின்றன. உலக மேடையிலிருந்து Dravidian Model குரல் ஓங்கி ஒலிக்க இருக்கின்றது!

தமிழர்களுக்கு மட்டுமல்லாது, மேலை & கீழை நாட்டு மக்கள் யாவருக்கும், திராவிட மாதிரியின் சமூகநீதியை அறிமுகம் செய்வதும், அயலகங்களில் விளைந்துள்ள மனிதநோக்கினையும் சமூகநீதியினையும் தமிழ்வெளியில் ஒப்பிட்டுச் செம்மை செய்து கொள்வதுமே இம்மாநாட்டின் நோக்கமாகும். “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று 2000+ ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவமும் மனிதநோக்குப் பார்வையும் விளைந்திட்ட திராவிட மண்ணல்லவா இது!

மனிதநோக்கும் சமூகநீதியும் என்பதே மாநாட்டின் மையப்பொருள். அந்தக் கருத்துக் கழனியில்..

The Central Theme of this Conference is Humanism & Social Justice, under which there are 10 sub themes as follows.

  • மனிதநோக்கும் பெண்ணுரிமையும்
  • சிறார்களிடையே மனிதநோக்கு
  • அன்றாடப் பகுத்தறிவுச் சிந்தனைகள்
  • சோதிடப் புரட்டை ஒழித்தல்
  • ஒடுக்கப்பட்டோருக்கான மனிதநோக்கு விடைகள்
  • தமிழ் வரலாறும் சமூகநீதியும்
  • திராவிட மாதிரியின் சமூகநீதி
  • கல்வியில் மனிதநோக்கு
  • உடல்நலத்திலும் வளத்திலும் மனிதநோக்கு
  • குடிபெயர்ந்தோருக்கான சமூகநீதியும் மனிதநோக்கும்

என்று மேற்காணும் பத்து உட்பொருண்மைகளில், இப் பன்னாட்டு மாநாடு நடைபெற உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், மானமிகு ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களும், மாண்புமிகு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி அனந்தசங்கரி அவர்களும், மேலைநாட்டு அறிஞர் பெருமக்களோடு, தங்களின் சீரிய உரைகளையும் ஒருங்கே வழங்கினார்கள். ஆசிரியரின் வாழ்நாள் மனிதநேய & மனிதவுரிமைப் பணிகளைப் பாராட்டிக் கனேடிய மனிதநேய அமைப்பு, “மனிதநேயர் சாதனையாளர்” என்ற விருதளித்துச் சிறப்பித்தது.

உரைகள் மிக்க பேச்சாக மட்டுமன்றிச் செயலிலும் சமூகநீதி செய்யும் முகத்தான், வளம்குன்றிய கனேடிய ஆதிகுடிக் குழந்தைகளுக்கான உணவுப் பொட்டலம் மடித்தலையும் மாநாட்டில் கலந்து கொண்டோர் செய்தார்கள். புத்தகக் கண்காட்சியும் நிகழ்வுற்றது. இம்மாநாட்டில், தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகக் குழுவும் கனடா வருகை தந்து பாங்குறக் கலந்து கொண்டது. ‘சாதி சூழ் உலகு’ என்ற தலைப்பில் இம்மாநாட்டுக்கென்றே வரையப்பட்ட பகடி நாடகமும் Nakkalites குழுவினரால் அரங்கேறியது. இம் மாநாடு, உலகளாவிய திராவிடத்தின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துற்றது அனைவருக்கும் மகிழ்ச்சி.

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • சங்க காலம் முதல் இன்று வரை, தமிழிலக்கிய மின்னணுத் தரவுத் தேடல் உணர்த்தும் செய்திகள்
  • கல்வியில் திராவிட மாதிரியும், இன்றைய சிக்கல்களும்
  • செருமானிய மொழிபெயர்ப்பில் திருக்குறள் (கார்ல் கிரவுல் மொழிபெயர்ப்பு)
  • சமகாலப் போலிச்செய்திகளின் போக்கு: இலங்கையில் அடையாளங் காணப்பட்டவை மீதான ஆய்வு.
  • திராவிட இயக்கமும், தமிழ்நாட்டில் அஞ்சல் தொலைதொடர்புத் தொழிற்சங்க இயக்கமும்.

பல்வேறு பொருண்மைகளில் தொகுக்கப்பட்டுள்ள இந்த 5 ஆய்வுக் கட்டுரைகளை, நீங்களும் வாசித்து உங்கள் கல்விப்புல அன்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். நம் திராவிடக் கல்விப் பயணம், கடல்கடந்து, உலகெலாம் சென்று சிறக்கட்டும்! உலகம் உவப்ப, பலர் புகழ் திராவிடம், வெற்றி கண்டாங்கு…!

-The Board of Editors

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 2, வெளியீடு 2 | ஏப்ரல் 2022 - ஜூன் 2022

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


திராவிடப் பொழில் வாசகர்கள் யாவருக்கும் சமத்துவ நாள் நல்வணக்கம்!

ஆம், நம் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாளைச் ’சமத்துவ நாள்’ என அறிவித்து, அந்நாளில் யாவரும் சமத்துவ உறுதிமொழி ஏற்க ஆவன செய்துள்ளார், மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள். இதற்கு முன்பும், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாளைச் ’சமூகநீதி நாள்’ என அறிவித்து, அப்போதும் சமூகநீதி உறுதிமொழியை ஏற்கச் செய்தார், அரசாங்க முறைமை வாயிலாகவே. இது, சிறப்பானதொரு முன்னெடுப்பு; திராவிட இயக்கத்தின் பயணத்தில், அடுத்த தலைமுறைக்கான ஆயத்தக் களம்.

திராவிடக் கல்விச் சிந்தனையின் அடிநாதமே சமத்துவமும், அதன் பாற்பட்ட சமூகநீதியும் தானே!

’யாவரும் சமம்’ என்பது, ’சூரியன் கிழக்கில் உதிக்கும்’ என்பது போல், இயல்பான இயற்கையான பொது அறிவு அல்லவா? இந்த எளிய உண்மைக்காகவா, இத்துணைப் போராடுகிறோம் என்றால், ஆம், தமிழினம் மட்டுமல்ல, உலகமெங்கும், இந்த எளிய உண்மையை நிலைநாட்டத் தான், பல இயக்கங்கள் பெரும்பாடு படுகின்றன, அன்றும் இன்றும்.

ஆதிக்கம் x சமன்மை என்ற போர், அய்யன் வள்ளுவன் காலந்தொட்டே நடந்து வருவதால் தான், ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற எளிய உண்மையைக் கூடத் தத்துவமாக்கிப் பாட வேண்டி இருந்தது.

  • பாலினச் சமத்துவம்
  • வகுப்புச் சமத்துவம்
  • வர்க்கச் சமத்துவம்
  • சாதியில் சமத்துவம்
  • சமயத்தில் சமத்துவம்
  • உணவில் சமத்துவம்
  • கல்வியில் சமத்துவம்

என்று சமத்துவத்தின் பொருண்மைகள் பலப்பல. சாதி என்பதே சமத்துவமின்மை தானே. சமம் என்று ஆகிவிட்டால், சாதி ஏது? ஒழிந்து விடுமே! எங்கெங்கெல்லாம் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுகின்றதோ, அங்கங்கெல்லாம் சமத்துவக் களங்களும் போராட்டங்களும் நடாத்தி, சமன்மை காணும் முயற்சியில் இடையறாது நம்மை ஈடுபடுத்திக் கொண்டே இருப்போம். இது நம் தமிழ்/திராவிடச் சமூகக் கடமை. இதற்கு ஓய்வென்பதே இல்லை!

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • பழந்தமிழ் வணிகர்களும், பண்பாட்டு விரவலும்
  • மாந்தவியலில் உய்யச் சிந்தனையும் சமூகநீதியும்
  • திருவள்ளுவரும் மாந்தமும்
  • பவுத்தம்: எழுச்சியும் வீழ்ச்சியும் – ஒரு வரலாற்றுப் பார்வை
  • வஞ்சிக்கப்பட்ட வரலாறு

சிறப்பாக யாக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து, கல்விப் புலங்களில் பகிர்ந்து கொள்க. இந்தக் கல்விப் பயணத்தில், எம்மோடு தொடர்ந்து பயணிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு, எங்களின் ஆரா அன்பும், நன்றியும் என்றும் உரித்து. வாருங்கள், பயணிப்போம்.

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 2, வெளியீடு 1 | ஜனவரி 2022 - மார்ச் 2022

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


உலகெங்கும் உறையும் திராவிடப் பொழில் வாசகர்கட்கும், திராவிடத் தமிழ் அறிஞர்கள் & மாணவர்கள், கல்விப்புலக் கல்வியாளர்கள் – யாவருக்கும் நல்வணக்கம்! மகிழ் திகழ் தமிழ்ப் புத்தாண்டு, தைத் திருநாளாகிய தமிழர் திருநாள், பொங்கல் நல்வாழ்த்துகள்!

  • பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி (பதிற்றுப் பத்து, சங்கத் தமிழ்)
  • பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து (சிலப்பதிகாரம்)
  • புதுக் கலத்து எழுந்த தீம்பால் பொங்கல் (சீவக சிந்தாமணி)

இல்லப் பொங்கலின் மகிழ்ச்சி போலவே, இலக்கியப் பொங்கலின் இன்பம் போலவே, ஆராய்ச்சிப் பொங்கலின் அருஞ்சுவையும் ஒருங்கு கூடும் நம் திராவிடப் பொழில் ஆய்விதழ், ஓராண்டு நிறைந்து, புத்தாண்டிலே புதுப்பொலிவு கொள்கிறது இவ்விதழில்!

கடந்து வந்த பாதையை அளவிட்டு, இனி கடக்கப் போகும் பாதையைத் திட்டமிட்டு, செவ்வனே செயல் திட்டம் வகுத்துக் கொள்வதே அறிவு சால் தொழின்முறையாகும். அந்நோக்கிலே, கடந்த ஆண்டு இதழ்களில், கீழ்க்காணும் பொருண்மைகள் பல ஆயப்பட்டன.

  • சங்கத் தமிழில் திராவிடச் செவ்வியல், அகம்/புறம் தோற்றங்கள்
  • திராவிடமும் திருக்குறளும் மனு மறுப்பும்
  • தமிழ்நாடும் பெரியாரும், இலங்கையும் திராவிடச் சமூகநீதியும்
  • சமூகநீதிப் போராட்டங்களுக்கெல்லாம் மூலமான வைக்கம் போராட்டம்
  • மலையாளமும் தமிழும், சமஸ்கிருத ஆதிக்கமும், அய்ரோப்பியப் பார்வைகளும்
  • இதழியலில் திராவிடமும் பெண்ணியமும்
  • திராவிட இயக்கமும் கருப்பின இயக்கமும் ஆப்பிரிக்க ஒப்புமையும்
  • திராவிட நாகரிகத் தொன்மையும், கீழடி முதலான தொல்லியல் சீர்மைகளும்
  • அறிவியல் மூலமாகச் சாதியொழிப்பு
  • திராவிடமும் திரைக்கலையும் சமூக வரலாறும்
  • நாத்திகச் சமயத் தத்துவங்களும் திராவிடமும் சைவ சபைகளும்
  • திராவிடம் பெற்றுத் தந்த சமயச் சமத்துவம் & தமிழ் அர்ச்சனை வழிபாட்டு உரிமைகள்

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் ’அன்னைத் தமிழில் அர்ச்சனை’ மற்றும் ‘அனைத்துச் சாதி அர்ச்சகர்கள்’ போன்ற சமூகநீதி மிக்க பல அரசாணைகளும், சென்ற ஆண்டு இதனூடே நடைபயின்று வந்து, ஒரு சீரிய ஆண்டாக நிறைந்தது. சமூகநீதி நாளெனப் பெரியார் பிறந்தநாளும் அரசுக் கட்டில் ஏறியது. இனி, வரும் ஆண்டுத் திட்டங்கள் என்ன? வகுத்துச் செல்லவுள்ள பாதைகள் என்னென்ன?

  • ஆராய்ச்சி மாணவ அரங்கம் (குறிப்பாகப் பெண்கள் & ஒடுக்கப்பட்ட சமூகப் புலங்களில் எழும் மாணவர்கள்)
  • உலக ஆராய்ச்சி நூல்கள் மற்றும் கல்விப் புலங்களைத் தமிழில் அறிமுகம் செய்தல்
  • உலகப் பேரறிஞர்களின் நேர்காணல் மற்றும் திராவிடம் சார்ந்த ஆய்வுப் பெருங் கருத்துரைகள்
  • சீரிய ஆய்வுக் கட்டுரைகளின் இருமொழியாக்கம் & உலகத் திரட்டிகளில் இணைதல்
  • அறிவியல் தரவுகள் மூலமாகத் திராவிடக் கொள்கைகளின் மீது ஆய்வு வெளிச்சம் பாய்ச்சல்

இவ்வைந்தும், இவ்வாண்டுப் பயணத்துக்காக நாம் வகுத்துக் கொண்ட இலக்குகள். சென்ற ஆண்டின் வெற்றிகளை விஞ்சிச் செயல்படுவதே, தொடர் முன்னேற்ற (Continuous Improvement) முறைமையாகும்! செயல்படுவோம்; சென்றடைவோம்!

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • தமிழில் ஐ/அய் & ஒள/அவ் நுட்பமும், பெரியாரின் முன்முனைப்பும்
  • திருவள்ளுவரைப் பற்றிய புனைகதைகள்
  • தொல்காப்பியப் பூங்கா வழிப் புலனாகும் கலைஞரின் இலக்கணப் புலமை
  • பெரியாரியல் நோக்கில் நற்றிணை
  • சுயமரியாதை இயக்கத்தின் ஆளுமை மிக்க பெண்கள்

இந்த இடையறாக் கல்விப் பயணத்தில், எம்மோடு இணைந்து பயணம் செய்யும் வாசகர்களாகிய நீங்கள் தான் ஆய்வுச் சுவைஞர்கள். வாருங்கள், அறிஞர்களும் சுவைஞர்களும் கைக்கோத்து, திராவிடத்தை உலக மயமாக்குவோம்; உலகத்தைத் திராவிட மயமாக்குவோம்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 1, வெளியீடு 4 | அக்டோபர் 2021 - டிசம்பர் 2021

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


”ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே” என்பது புறநானூற்றுச் சங்கத்தமிழ். அது போல், நம் திராவிடப் பொழில் ஆய்விதழும் ஓராண்டு நிறைவுக்குத் தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறது இவ்விதழில்!

உலகமெங்கும் உறையும் திராவிடப் பொழில் வாசகர்களும் அறிஞர்களுமாகிய உங்கள் யாவருக்கும், சமூகநீதி திகழ் வணக்கம்!

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து, பெரியார் பிறந்தநாளை, இவ்வாண்டு முதல் சமூகநீதி நாளாகவும் கொண்டாடத் துவங்கினோம் அல்லவா? சமூகத்தில் மட்டுமல்ல; மொழியிலும் கூடச் சமூகநீதி உண்டு. மொழி, மக்களின் சொத்து; பிறகே அறிஞர்களின் சொத்து. அம் மக்களின் மொழியிலே, வேறு பிற மொழி புகுந்து ஆதிக்கம் செலுத்தினாலோ, வேறு பிற ஆட்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தினாலோ, அந்த ஆதிக்கத்தை உடைத்துச் சமத்துவம் காணும் நாள் வந்தே தீரும். ஆதிக்கம் நீக்கிச் சமத்துவம் காண்பது தானே திராவிடவியலின் அடிப்படை!

இந்த இதழ், திராவிட இயக்க முன்னோடியாம் நீதிக் கட்சி அரசில், தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராய் விளங்கிய மாண்புமிகு அ. சுப்பராயுலு அவர்களின் பிறந்தநாளிலே (Oct 15), வெளிவருகின்றது. 16-09-1921 அன்று, முதலமைச்சர் பனகல் அரசரின் ஆட்சியில், நீதிக் கட்சி அரசு விதைத்த இட ஒதுக்கீட்டு அரசாணை#613 தானே, பின்பு இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக்கான கலங்கரை விளக்கம் ஆயிற்று! அந்தச் சமூகநீதி நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், கல்விக் கதவுகளை நம் அனைவருக்கும் திறந்துவிட்ட திராவிட இயக்கத்தை நோக்கி நன்றி பாராட்டுவோம்; சமூகநீதி நாள் உறுதிமொழியினை ஏற்போம்!

இந்த 4ஆம் இதழ், 6 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • தமிழ்நாட்டின் இரு பெரும் பகுத்தறிவாளர்கள் – வள்ளுவரும் பெரியாரும்
  • வள்ளுவத் தொன்மரபு: ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் ஆய்வும், நம் சீராய்வும்
  • திராவிட ஆப்பிரிக்க ஒப்புமைக் கூறுகள்
  • சங்கச் செவ்வியல் மறுவாசிப்பு - பெரியாரைத் துணைக்கோடல்
  • குறளும் மனுவும் - ஒப்பீடு
  • வைக்கம் – இந்தியச் சமூக விடுதலைப் போராட்டங்களின் முன்னோடி

ஆய்விதழின் முகப்பை, வைக்கம் போராட்டத்தின் ஓவியம் அணி செய்கின்றது. நாட்டு விடுதலைக்கு மட்டுமன்றி, மக்களின் சமூக விடுதலைக்கும் அம்மக்களையே பெருமளவில் திரட்டிப் போராடி, பல பின்னாள் நுழைவுகளுக்கு வித்திட்ட முதல் இந்தியப் போராட்டம், வைக்கம் போராட்டம்.

திராவிடப் பொழில் ஆய்விதழ் ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், ஆராய்ச்சி மாணவர்களுக்கென்றே தனியரங்கம், உலக ஆராய்ச்சி நூல்களின் அறிமுகம், உலகப் பேரறிஞர்களின் நேர்காணல் என்று இன்னும் பல புதிய பாதைகளில் பயணம் தொடரத் திட்டமிட்டுள்ளோம். இந்த முதலாம் ஆண்டிலேயே, தமிழ்நாடு & இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் திராவிடப் பொழிலை ஆற்றுப்படுத்திய வாசகர்களாகிய உங்களுக்கு நனி நன்றி. இந்த இடையறாக் கல்விப் பயணத்தில், இவ்வாண்டு போலவே, எவ்வாண்டும் எம்மோடு இணைந்திருங்கள். திராவிடத்தை உலக மயமாக்குவோம்; உலகத்தைத் திராவிட மயமாக்குவோம்; ஏனெனில், திராவிடம் = சமத்துவம்!

ஆய்வுகள் பழகுவோம். இக் கல்விப் பயணத்தில் யாவரும் இணைந்திருங்கள்.

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 1, வெளியீடு 3 | ஜூலை 2021 - செப்டம்பர் 2021

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


உலகத்தைச் சமூகநீதி மயமாக்கல்; சமூகநீதியை உலக மயமாக்கல் - திராவிடம் என்பதன் அடிநாதமே சமூகநீதி அல்லவா! அந்தத் திராவிடம் மிகுந்த தமிழ் அன்பர்களாகிய உங்கள் யாவருக்கும் மகிழ் திகழ் வணக்கம்!

பெரியாரின் பெருநண்பர், பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளிலே (July 15), ’திராவிடப் பொழில்’ ஆய்விதழின் இந்த 3ஆம் இதழ், தமிழ்நாடு மட்டுமல்லாது ஈழத்திலும் சமூகநீதி வித்துக்களோடு, மாந்தவியல் வேளாண்மையை முன்னெடுத்து, பாங்குற வெளிவருகின்றது.

சென்ற இரு இதழ்களுக்கும், உலகம் முழுதுமிருந்து, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டிப் பல பின்னூட்டங்கள் வந்துள்ளன; இப்படி, உலக அறிஞர் பெருமக்களின் வாசிப்பும் திறனாய்வும் ஒருசேர வாய்க்கப் பெற்று, ’திராவிடப் பொழில்’ ஆய்விதழ், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவது கண்டு நனி மிகு மகிழ்ச்சி.

  • ஆய்வுலகில் திராவிட ஆய்வுப் புலமையை வளர்த்தெடுத்து, உலக அளவிலான கல்விப்புலத் தரத்திலே (Global Academic Standards), கல்வியாளர்கள் பலரையும், திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்கு திரட்டலே நம் குறிக்கோள்
  • திராவிடத் தமிழ்ச் சமூகமான பொதுமக்களுக்கும், திராவிட ஆய்வியல் அறிஞர்களுக்கும் இணைப்புப் பாலம் உருவாக்கி, சமூகநீதிப் பொருண்மைப் பயன் நல்கலே நம் இலக்கு.

அந்தச் சீரிய பணியில், உலகப் பல்கலைக்கழகங்களோடும், வையத்து வல்லுநர்களோடும், திராவிட ஆய்வாளர்களோடும் (குறிப்பாக: பெண் ஆய்வாளர்களோடும், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் முகிழ்த்தெழுந்துள்ள இளநிலை ஆய்வாளர்களோடும்) கல்விமுறை நல்லுறவு பேணி, சிறப்பானதொரு ஆய்வுச் சூழலைத் ’திராவிடப் பொழில்’ ஊக்குவிக்கும்.

தொடர்ச்சியான முன்னேற்றம்’ நோக்கிய இப் பயணத்தில், இந்த 3ஆம் இதழ், 6 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது. தமிழ்நாட்டிலிருந்தும், ஈழம் குறித்தும், நோர்வே நாட்டிலிருந்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

  • பெரியார் காட்சிக் கொள்கை: திராவிடச் சினிமாவின் தேவையும் முரணும் இயல்பியலும் (ஆங்கிலத்தில்)
  • இலங்கையில் சமூகநீதி: சில அறிமுகக் குறிப்புகள்
  • உலகாயதமும் பெரியாரியமும்
  • கேரளத்தின் பழம் பதிவுகளில் தமிழ்
  • கிறித்துவத்தைத் தின்று செரிக்கும் சாதியம்
  • திராவிட நாகரிகத்தின் தொன்மையும் முன்மையும்

அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்டு வெளிவரும் மேற்கண்ட கட்டுரைகளை வாசித்து, செவிச்செல்வமும் விழிச்செல்வமும், உளச்செல்வமும், அறிசெல்வமும் மேலோங்கி இன்புறுக! மேலதிக வினாக்கள் ஏதுமிருப்பின், எம்மையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகவே நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஆய்விதழின் முகப்பை, கீழடி பற்றியம் சார்ந்த படமொன்று அணி செய்கின்றது. திராவிடப் பொழிலின் முதலாம் இதழ், அரப்பா அட்டைப் படத்தோடு துவங்கிற்று. இந்த இதழ், கீழடி அட்டைப் படத்தோடு உலா வருகின்றது. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையும் முன்மையும் கூட, மதம் அற்று, மானுடமே பற்றியமாய்க் கொண்டுள்ளதை, தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்கிறார்கள். சிந்துச் சமவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும், ஒன்றே அல்லவா!

திராவிடப் பொழில் ஆய்விதழை நீங்கள் வாசிப்பதோடு நின்றுவிடாது, இன்னும் பலரோடும் கூடிக் கலந்துரை செய்வதே, அறிவு பெருக்கும் பெருவழி. அந்த ஆய்வினால் பெற்ற அறிவை, விரிவு செய்வதே, மானுட வளர்ச்சியின் வழி.

வாருங்கள், சமூகநீதி என்னும் தமிழ் மண்ணிலே, திராவிட ஆய்வுப் பயிர், விளைப்போம்! விளைவிப்போம்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 1, வெளியீடு 2 | ஏப்ரல் 2021 - ஜூன் 2021

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


உலகெலாம் பரவி வாழும் திராவிடத் தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளிலே (ஏப்ரல் 14), நம்முடைய ’திராவிடப் பொழில்’ ஆய்விதழின் இந்த இரண்டாம் இதழ், சமூகநீதி வித்துக்களைத் தாங்கிப் பாங்குற வெளிவருகின்றது. சென்ற முதலாம் இதழ், பார் முழுதும் பரவி, உலக அறிஞர் பெருமக்களின் திறனாய்வுப் பின்னூட்டங்களையும் வாழ்த்துக்களையும் ஒருசேரப் பெற்றதில், நம் யாவருக்கும் மகிழ்ச்சி.

’தொடர்ச்சியான முன்னேற்றம்’ (Continuous Improvement) என்கிற மாந்தவியல் கோட்பாட்டின் வண்ணம், முன்னிலும் சிறந்து கொண்டே செல்லும் இக் கல்விப் பயணத்தில், அடுத்த இதழும் நுட்பமான பல ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வருகிறது.

திராவிட ஆய்வுப் புலமையினை, ஆய்வுலகுக்குப் பறை சாற்றும் வகையில், உலக அளவிலான கல்விப்புலத் தரத்திலே (Global Academic Standards), பல கல்வியாளர்களைத் திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்கு திரட்டி, இந்த ஆய்விதழின் வாயிலாகத் திராவிடத் தமிழ்ச் சமூகமான பொதுமக்களுக்கும், அறிஞர்களுக்கும் பயன்மிகு பொருண்மையை வழங்கலே நம் குறிக்கோள்.

அந்தப் பணியில், உலகெங்கும் உள்ள துறைசார் வல்லுநர்களோடு, திராவிடம் சார்ந்த வல்லுநர்களையும், பெண் ஆய்வாளர்களையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் முகிழ்த்தெழுந்துள்ள இளநிலை ஆய்வாளர்களையும், ’திராவிடப் பொழில்’ ஆய்விதழ் ஊக்குவிக்கும் என்று முன்பே சொல்லியிருந்தோம். சொன்ன வண்ணம் செய்யும் நன்னயத்தின் படி, இவ்விதழில் இரண்டு பெண் ஆய்வாளர்கள், தம் ஆய்வுப் படைப்பினை வழங்குகின்றார்கள். ஆய்வுலகிலும் பெண்மையின் வெற்றி பொலிக!

இந்த இரண்டாம் இதழில், 6 ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்நாட்டிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இடம் பெற்றுள்ளன.

  • மத நூல்களின் மேலாதிக்கமும், தமிழில் அருச்சனை எனும் சடங்கியல் வளர்வாக்கமும்
  • திராவிட இயக்கமும் திருக்குறள் எழுச்சியும்
  • தமிழ் அகப்பொருளும் புறப்பொருளும் - பிறப்பகம் தமிழகமா? அயலகமா?
  • தந்தை பெரியாரின் அணுகுமுறை
  • முதல் பெண் இதழியல் ஆளுமைகள்
  • ஜாதியும் சமதர்மமும்

துறை அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்டு வெளிவரும் இக்கட்டுரைகளை வாசித்து மகிழ்க. மேலதிக வினாக்கள் இருப்பின், தயக்கமேதுமின்றி எம்மையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்க.

சென்ற இதழ்க் கட்டுரைகளின் மீதான ஓர் ஆய்வரங்கம், அமெரிக்காவில் பிப்ரவரித் திங்களில் நடைபெற்றது. இணைய வழியே தமிழ்நாட்டிலிருந்தும் ஆய்வாளர்கள் பலர் அதில் கலந்து கொண்டார்கள். அந் நிகழ்வுக் குறிப்பும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. இது போல் ஆய்வரங்குகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆய்விதழை வாசிப்பதோடு நின்றுவிடாது, கூடிக் கலந்துரை செய்வதே, அறிவு பெருக்கும் பெருவழி. அறிவை விரிவு செய்வதே மானுட வளர்ச்சிவழி.

இவை துறை அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் பொருண்மை. வாசித்துப் பயனுறுக. மேலதிக வினாக்கள் இருப்பின், இதழாசிரியரையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

பகுத்தறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, மொழி, மனிதம் போன்ற நன்னயங்களில், திராவிடம் சார்ந்த கல்விப்புல ஆராய்ச்சியே நம் இலக்கு! அதில் காய்தல் உவத்தல் இலாத ஆய்வுச் சீர்மையோடு, தமிழ்ச் சமூகத்தைச் சூழ்ந்துள்ள பல பற்றியங்களில், ஆழ உழுகின்றோம்; விதைக்கின்றோம்; விளைக்கின்றோம்; திராவிட ஆய்வுப் பயிர் செழித்து விளையட்டும்!

திராவிட ஆய்வுகள் பழகுவோம். இக் கல்விப் பயணத்தில் யாவரும் இணைந்திருங்கள்.

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
பேரா, முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர், சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
மரு. சோம. இளங்கோவன்
முனைவர். வா. நேரு

தொகுதி 1, வெளியீடு 1 | ஜனவரி 2021 - மார்ச் 2021

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


உலகெங்கும் உள்ள திராவிடத் தமிழார்வலர்களுக்கும், அறிவுச் சான்றோர்கட்கும் முதல் வணக்கம்!

”பொழில் வதி வேனில், பேர் எழில் வாழ்க்கை” என்று சங்கத்தமிழ் நவிலும் அழகுமிகு வாழ்க்கை போலவே, ’திராவிடப் பொழில்’ ஆய்விதழும் தன் பயணத்தைத் துவங்குகிறது. இது ஒரு கல்விப் பயணம். மக்களை நோக்கிய கல்விப் பயணம். மக்களையும் அறிஞர்களையும் ஒருங்கிணைக்கும் கல்விப் பயணம். கல்விக் கதவுகளை அனைத்து மக்களுக்கும் திறந்துவிட்ட திராவிட இயக்கச் சமுகநீதியின் கல்விப் பயணம்.

பொழில் என்ற சொல்லுக்கு, வெறும் சோலை, பூங்கா என்று மட்டுமே பொருள் அல்ல; பொழிந்து உள்ள சோலையே, பொழில்! நீர் பொழிந்து, நீர் இடையறாது, தன்னகத்தே ததும்பும் சோலையே பொழில். போலவே, திராவிடம் பொழிந்து, திராவிடம் இடையறாது ததும்பும் சோலையே, ’திராவிடப் பொழில்’.

பகுத்தறிவு, பண்பாடு, நாகரிகம், கலை, வரலாறு, மொழி, மனிதம் போன்ற நன்னயங்களில், திராவிடம் சார்ந்து, ஆழமான கல்விப் புல ஆராய்ச்சியை, அனைவருக்கும் கொணர்வதே இந்த ஆய்விதழின் நோக்கம்.

  • திராவிட நாகரிகம்/ திராவிடப் பண்பாடு/ திராவிடச் சமூகநீதி/ திராவிடமும் தமிழும் சார்ந்த அறிவுப்புலத் துறைகளில், நயன்மிகு ஆராய்ச்சி செய்தல்.
  • இந்த ஆராய்ச்சியின் வாயிலாகத் திராவிடத் தமிழ்ச் சமூகமான பொதுமக்களுக்கும், அறிஞர்களுக்கும் பயன்மிகு பொருண்மை வழங்கல்.
  • உலக அளவிலான கல்விப்புலத் தரத்திலே (Global Academic Standards), உலகக் கல்வியாளர்களைத் திராவிடச் சிந்தனை சார்ந்து ஒருங்கு திரட்டல்.
  • திராவிட இயக்கத்தின் ஆய்வுப் புலமை மற்றும் அறிவுப் புலமையை உலகறியச் செய்து, திராவிடக் கருத்தியலுக்கான தரவுத் தொகுப்பாக விளங்குதல்.

மேற்சொன்ன முன்னெடுப்புகளில், உலகெங்கும் உள்ள துறைசார் பெருவல்லுநர்களோடு, திராவிடம் சார்ந்த இளநிலை ஆய்வாளர்களையும், இளநிலைப் பெண் ஆய்வாளர்களையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் முகிழ்த்தெழுந்துள்ள இளநிலை ஆய்வாளர்களையும், ’திராவிடப் பொழில்’ ஆய்விதழ் ஊக்குவிக்கும். காலாண்டு தோறும், இருமொழி உள்ளீடுகளோடு, உலக ஆய்வுத் திரட்டிகளில் இணைந்துகொண்டு, நிகர்நிலைப் பல்கலைக்கழக வெளியீடாகத் ‘திராவிடப் பொழில்’ வெளிவரும்.

இந்த முதலாம் இதழில், 6 சீரிய ஆய்வுக் கட்டுரைகள், தமிழ்நாடு மட்டுமல்லாது, கனடா, ஐரோப்பாவிலிருந்தும் இடம் பெற்றுள்ளன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தமிழ்நாடு உலகுக்கே அளித்த கொடை. “பிறப்பொக்கும்” என்ற நெறிக்கு, உலகில் எங்கு அச்சுறுத்தல் நேர்ந்தாலும், அது நமக்குமான அச்சுறுத்தலே. (Injustice anywhere, is a threat to justice everywhere).

  • அமெரிக்கக் கறுப்பினச் சமூகநீதிப் போராட்டமும், திராவிட இயக்கமும் - ஓர் ஒப்பீடு
  • சங்கத் தமிழில் திராவிடக் கருத்தியல்
  • ஆங்கிலேயே/ஐரோப்பிய அறிஞர் சிலரின் சம்ஸ்கிருத நிலையும், இந்தியச் சமூக மெய்யான பண்பாடும்
  • தமிழ்நாடு என்ற பெயர் வரலாற்றில் பெரியாரின் பங்கு
  • 19-ஆம் நூற்றாண்டுச் சைவச் சபையில் திராவிட/ஆரிய எதிர்நிலைகள்
  • மரபணு அறிவியல் அறிதலின் மூலமாகச் சாதி ஒழிப்பு

இவை துறை அறிஞர்களால் சீராய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் பொருண்மை. வாசித்துப் பயனுறுக. மேலதிக வினாக்கள் இருப்பின், இதழாசிரியரையோ அல்லது கட்டுரையாளர்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

திராவிடத்துக்கான ஆய்விதழின் காலத் தேவையை அறிந்து, இதனை முன்னெடுத்துள்ள ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்குச் சமூகநீதி திகழ் நன்றி. இச்சமயத்தில், வரலாற்றிலே ஒளிரும் திராவிட அறிவுத் தகைமையாளர்கள் – அயோத்திதாசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி – உள்ளிட்ட ஆயிரம் ஆயிரம் விண்மீன்களை நினைவு கூர்ந்து வணங்கி, அவர்கட்கு நன்றி நவின்று, பயணம் தொடங்குகிறோம்.

இனி, காலாண்டு தோறும் சந்திப்போம். காலத்துக்குத் தேவையான திராவிடம் பழகுவோம். இக் கல்விப் பயணத்தில் இணைந்திருங்கள்; நனி நன்றி. வாசகர்களுக்குத் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல்/ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!