English

View in English

தொகுதி 3, வெளியீடு 3

சூலை 2023 - செப்டம்பர் 2023

நல்வரவு!

திராவிட ஆய்வுகள் குறித்த இந்த இதழ், காலாண்டு தோறும், இருமொழி உள்ளீடுகளோடு, உலக ஆய்வுத் திரட்டிகளில் இணைந்துகொண்டு, நிகர்நிலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவரும்.

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


அறிவுப்புல அன்பர்களாகிய திராவிடப் பொழில் வாசகர்களுக்கு, வணக்கம்!

பெரியாரின் பெருநண்பர், பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளிலே (July 15) இவ்விதழ் வெளிவருகின்றது. இதுகாறும் ’திராவிடப் பொழில்’ காலாண்டு ஆய்விதழ், 10 வெளியீடுகளை வெற்றிகரமாகக் கடந்து, 11ஆம் இதழில் அடியெடுத்து வைக்கிறது.

’பதிகம்’ என்று இலக்கிய வெளியில் ஒரு செழுஞ்சொல் சொல்வர்கள். 10 பாடல்கள் கொண்டது ஒரு பதிகம். செய்யுள் தொகுப்பில் ஒரு பதிகம் நிறைந்து, அடுத்த பதிகம் செல்ல வேண்டும். அது போலவே நாமும், நமது முதற் பதிகம் கடந்து, அடுத்த பதிகத்திலும் சமூகநீதி வித்துகளைத் தூவி, மாந்தவியல் வேளாண்மையைத் தொடர்ந்து முன்னெடுக்க உறுதியேற்போம்!

கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் திராவிடப் பொழில் கடந்து வந்த பாதை குறித்து, ஆசிரியர் குழுவில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினோம். நமது வேந்தர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நிகழ்வுற்ற இக் கூட்டம், இது வரையிலான நம் சாதனைகளையும் சோதனைகளையும் தரவுகளோடு அலசி ஆய்ந்தது. சாதனைகளின் மேற்சென்று, அடுத்த கட்ட இலக்குகளை மானமிகு வேந்தர் நமக்கு வகுத்தளித்துள்ளார். அந்த ஈராண்டுத் தரவுகளை, உங்கள் பார்வைக்கும் இவ்விதழில் வைக்கிறோம்.

இவ்வாண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு & கலைஞர் நூற்றாண்டு எனும் இரு பெருஞ்சிறப்புகளைத் தாங்கி நடைபோடுகிறது.

வழிபாட்டுச் சமத்துவத்தை நிலைநாட்ட, இந்தியத் துணைக்கண்டத்தில் எழுந்த முதற் போராட்டம் வைக்கம் போராட்டம். வீதி நுழைவாகத் தொடங்கி, ஆலய நுழைவாக வளர்ந்து, யாவரும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற நிலையடைய, பின்னாளில் எழுந்த பற்பல போராட்டங்களின் முதல் தாய், வைக்கம் போராட்டமே. அதே போல், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த கருவறைச் சாதி ஆதிக்கத்தை முறியடித்து, முறையான பயிற்சியோடு யாவரும் கருவறைக்குள் நுழைந்து பணி செய்யலாம் என்ற நிலையடைய அரசாணை வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இப்படியாகச் சமத்துவத்தின் இரு நூற்றாண்டுகளும் ஒருசேர வருவது, சமூகநீதி வரலாற்றில் சிறப்பானதொரு காலக்கட்டம்.

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

  • இந்தியாவில் சாதிகள்: இயங்குமுறை, தோற்றமும் பெருக்கமும்
  • தமிழ்ச் சூழல் : சமூகநீதி - வ.உ.சி.
  • செக்கார் வணிகச் சமூகம் - ஒரு வரலாற்றுப் பார்வை
  • அவ்வை என்னும் அரிய தமிழ் அறிஞர்
  • பிற்காலச் சோழர்களின் செப்பேடுகளும், பார்ப்பனர்களுக்கான தானங்களும்

திராவிட ஆய்வுப் புலமையை உலகறியச் செய்யும் இந்த இடையறாக் கல்விப் பயணத்தில், நயன்மிகு ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொள்வோம். ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து மகிழ்க, கல்விப்புல நண்பர்களிடமும் பகிர்ந்து மகிழ்க. கல்விச் செல்வத்தின் பயனே ஈதல் அல்லவா! திராவிடக் கல்விச் செல்வத்தையும் ஆய்வுச் செல்வத்தையும் அனைவருக்கும் தருவோம்!

-ஆசிரியர் குழு

பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்

இந்த இதழின் உள்ளே