திராவிடப் பொழில் வாசகர்களுக்கு, நனி மிகு வணக்கம்!
இவ்விதழ் காலந்தாழ்த்தி வந்தமைக்கு, வாசகர்களாகிய உங்களிடம் பொறுத்தருளல் கோருகிறோம். பல்வேறு அலுவல் பணிகளாலும், கட்டுரையாசிரியர்களின் நேரம் கருதியும், இக்காலத் தாழ்வு ஏற்பட்டு விட்டது. ஆனாலும், தேனீக்களாகிய வாசகர்கள், ”இதழ் எங்கே?” என்று எம்மைத் துளைத்தெடுத்து, ஊக்கமளித்து, எம்மை வெகுவாக முடுக்கி விட்டனர்.
ஓர் ஆய்விதழ் என்பது வெறும் கட்டுரைத் தொகுப்பாக அமைந்து விடாது, ஆய்வுத் தரமுள்ள கட்டுரைத் தொகுப்பாக அமைவதே சாலச் சிறந்தது. அதன் அடிப்படையில் தான், காலத் தாழ்வு ஏற்பட்டாலும், நல்ல ஆய்வுத் தொகுப்புகளுக்காகக் காத்திருந்து பதிப்பிக்கின்றோம். தங்களின் நற் புரிதலை வேண்டுகிறோம்.
தோன்றின் புகழொடு தோன்றுக – அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று!
என்று இதைத் தான் ஐயன் வள்ளுவனும் புகழ் அதிகாரத்தில், தரத்தின் உளவியலாகக் காட்டிச் சென்றார்.
நம் ஆய்வுத்தாள்கள், அறிவுப்புலத்தில் பலவாறாகப் பேசப்பட்டும், மீளாய்வு செய்யப்பட்டும் உள்ளன. இக்கல்விப் பயணத்தில், பல கட்டுரையாளர்களும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து இணைந்துள்ளனர். எம்முடன் பயணித்து, பங்களிப்பு நல்கும் வாசகர்களாகிய உங்களுக்குத் தான் எம் அத்துணை நன்றியறிதலும்!
இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.
1.இரும்புக் காலமும் ஆதி நாகரிகங்களும், அதனூடான தமிழர்களின் தொன்மமும்
2.போராட்டங்களும் சமூகநீதிப் பாடங்களும்
3.சமய அமைப்பு விதிகள்: ஒரு சடலக்கூராய்வு
4.மதுவின் வரலாறு – விலக்கு – சாத்தியக்கூறுகள்
5.தொன்மங்களைக் கட்டுடைத்துத் திராவிடச் சித்தாந்தம் காத்த கலைஞர்
திராவிடப் புலமை சார்ந்த இந்தக் கல்விப் பயணத்தில் தொடர்ந்து பயணிக்க உங்கள் ஆதரவைக் கோருகின்றோம். ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து, உங்கள் கல்விப் புலத்தில் பகிர்ந்து, அறிதல் பயணத்தில் மகிழ்வீராக!
- ஆசிரியர் குழு
பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்